திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை (1964-2014) நினைவு கூறும் வகையில் தேசிய அளவிலான கருத்தரங்கம் - நிறைவு விழா

  பெரியார் கலைக் கல்லூரியின் பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், கடலூர் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை, 1 &  2 ஆகஸ்ட் 2013 ஆகிய இரு நாட்களில் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம், புதுதில்லி நிதி உதவியுடன் “சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம்: ஆதிக்கநிலைநாட்டலும் சச்சரவுகளும் – கடலூர் குறித்த சிறப்பாய்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழா நேற்று மாலை (02.08.2013 - வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் கல்லூரியின் விழா அரங்கில் நடைபெற்றது. 

பெரியார் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வி.என். விஸ்வநாதன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

      பெரியார் கலைக் கல்லூரியின் பொன்விழா ஆண்டின் துவக்கத்தையொட்டி, கல்லூரியின் 50 ஆண்டு கால வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகள் தொடங்கப்படுகின்றன, நிறைவு விழாவில் அது நூலாக வெளியிடப்படும். மேலும், கடலூரின் காலனியாதிக்க வரலாற்றை ஆவணப்படுத்துகின்ற வகையில், இந்த இரு நாள் தேசியக் கருத்தரங்கில் சமப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளியிடப்படும். ஒரிரு மாதங்களுக்குள்ளாகவே அப்பணி செய்து முடிக்கப்படும். மேலும், இது போன்ற தேசியக் கருத்தரங்குகளை கல்லூரியில் தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.   

       திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே. ஜான்குமார் அவர்கள் தேசியக் கருத்தரங்கத்தின் நிறைவு விழாப்பேருரை நிகழ்த்தினார்.

 அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது, 

சோழமண்டலக் கடற்கரையில் காலனியாதிக்க மேலாதிக்கம் நிலைபெற்றதற்கு அக்காலகட்டத்தில் அப்பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்களின் தாராள வாணிபக் கொள்கையே காரணம். அக்கொள்கையின் காரணமாக அவர்கள் காலனியாதிக்கச் சக்திகளுக்கு கடற்கரையோரா நகரங்களில் வாணிபம் செய்வதற்கு அனுமதி அளித்தனர். அவ்வகையில் அனுமதி பெற்ற அயல்நாட்டவர் காலப்போக்கில் கடல்சார் வாணிபத்தையும், கடலையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டனர். அதன்பிறகு அவர்களுக்கு அனுமதியளித்த மன்னர்களே கடல்கடந்து பிறநாடுகளோடு வாணிபம் செய்வதற்கு காலனியாதிக்கச் சக்திகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசுக் கல்லூரியில் இது போன்ற தேசியக் கருத்தரங்குகள் நடத்தப்படுவது ஆச்சரியம் அளிக்கக் கூடியதாகும். இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்.     

     இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசியக் கருத்தரங்கில், கடலூரின் காலனியாதிக்க வரலாறு குறித்த 35 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 

    கருத்தரங்கில் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகழ்மிக்க மற்றும் அனுபவம் மிக்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வரலாற்றாளர்கள், ஆய்வறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.      

    நிறைவுவிழா நிகழ்ச்சியில், முன்னதாக பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. இராயப்பன் அவர்கள் வரவேற்றார்.        

    நிறைவாக, தேசியக் கருத்தரங்கத்தின் இயக்குநரும் பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் நா. சேதுராமன் அவர்கள் நன்றி கூறினார்.   

    பெரியார் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பிரபா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார் மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் தி. சிவகாமசுந்தரி, நா. தெய்வாம்சம், முனைவர் வீ. ரேவதி, முனைவர். இ. விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய கீதத்துடன் கருத்தரங்க நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.    

 தேசியக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

 1.  கடலூரின் காலனியாதிக்க கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

2. கடலூரின் வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் கடலூர் வரலாற்று ஆவண மையம் ஒன்றை கடலூரில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

3. வரலாற்றுப் பாரம்பரியச் சின்னமான புனித டேவிட் கோட்டை பராமரிப்பிலாத நிலையில் இருக்கிறது. அதனைப் புனரமைக்க வேண்டுமென்றும், அங்கு வரும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அக்கோட்டை குறித்த வரலாற்றைக் காட்சிப் படுத்தி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசையும், மத்திய அரசின் தொல்லியல் துறையையும் கேட்டுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

பார்க்க: 

 



0 கருத்துகள்:

மாப்பிள்ளை பெஞ்ச்

http://4.bp.blogspot.com/-hlpmcv9ukXM/TdYE1d7ZQ0I/AAAAAAAAAKg/CK8Z6WqhFRA/s1600/cooltext522765548.gif

எழுத்து அறிவித்தவர் இறைவன் ஆவார்

"இந்த வலைப்பூவை தாவரவியல் துறை பேராசிரியை முனைவர்.ச.கீதாதேவி அவர்களுக்கு சமர்பிக்கிறேன்" - கடலூர் மாவட்ட செய்திகள்

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP